என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி
தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி ‛வாத்தி, லக்கி பாஸ்கர்' ஆகிய படங்களின் மூலம் தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களை ஈர்த்தார். தற்போது சூர்யாவின் 46வது படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
வெங்கி அட்லூரி அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, இதுவரை என் இயக்கத்தில் வெளியான ஐந்து படங்களின் கதையையும் நான் முதன் முதலில் நாக சைதன்யாவிடம்தான் கூறினேன். ஆனால் எந்தப் படங்களும் அவருடன் நடக்கவில்லை. அதற்கு தேதி பிரச்னைகள் மற்றும் இதர விஷயங்கள்தான் காரணம். சமீபத்தில் நான் நாக சைதன்யாவைச் சந்தித்துப் பேசினேன். சிரித்துக் கொண்டே 'இந்த முறை நாம் மிஸ் செய்யக் கூடாது. நிச்சயமாக நாம் இணைய வேண்டும்' எனக் கூறினார் என தெரிவித்துள்ளார்.
நாக சைதன்யாவின் சகோதரர் அகில் அக்கினேனியை கதாநாயகனாக வைத்து 'மிஸ்டர் மஞ்சு' என்கிற படத்தை வெங்கி அட்லூரி இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.