வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் 25 சதவீத கேளிக்கை வரி, 18 சதவீத வரிவிதிப்பை கண்டித்து ஆகஸ்டு மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை என தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் முடிவு செய்து உள்ளனர். இது குறித்து கூறப்படுவதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் தியேட்டர் டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வரி மற்றும் திரைபடங்களுக்கு மாநில அரசின் கேளிக்கை வரி என்ற இரட்டை வரி விதிப்பு முறை தற்போதுவரை அமலில் உள்ளது. இந்நிலையில் 100 ரூபாய்க்கும் குறைவான சினிமா டிக்கெட்டுக்கு 12 சதவீதமும், அதற்கு மேல் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. மேலும் கேளிக்கை வரி 25 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதனால் போதுமான வசூல் இல்லாததால் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, தமிழகத்தை ஒப்பிட்டு கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் வரும் ஆகஸ்டு மாதம் முதல் புதுச்சேரியில் திரைப்படங்களை வெளியிட போவதில்லை என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.