மேலும் செய்திகள்
இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி'
46 days ago
செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ்
46 days ago
நடிகர் திலகம், நடிப்பின் இலக்கணம், கலைத்தாயின் தவப்புதல்வன், என அழைக்கப்படும் நடிகர் சிவாஜி கணேசனின் 24வது நினைவுத்தினம் இன்று (ஜூலை 21). குழந்தைப் பிராயத்திலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அதன் காரணமாக ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோதே வீட்டை விட்டு வெளியேறி, பின் தனது தாயின் அனுமதியோடு நாடகங்களில் நடித்து, தனது கலைப்பணியை துவக்கினார்.
நாடகத்தில் இவர் ஏற்று நடித்த முதல் கதாபாத்திரமே பெண் வேடம்தான். “இராமாயணம்” நாடகத்தில் 'சீதை' வேடம் ஏற்று நடித்திருந்தார். அதன் பின் பரதன், சூர்ப்பனகை, இந்திரஜித் என பல வேடமேற்றும் நடித்தார்.
1946ஆம் ஆண்டு திராவிட கழகம் மாநாட்டை ஒட்டி, அண்ணாதுரை எழுதிய “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்ற நாடகத்தில் 'சிவாஜி'யாக நடித்த வி சி கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்த ஈவெ ராமசாமி, இன்றிலிருந்து நீ வெறும் கணேசன் அல்ல சிவாஜி கணேசன் என கூற, அதுவே நிலைத்து, சிவாஜி கணேசன் ஆனார்.
1952ஆம் ஆண்டு “நேஷனல் பிக்சர்ஸ்” சார்பில் தயாரிக்கப்பட்ட “பராசக்தி” என்ற திரைப்படத்தில் 'குணசேகரன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்து, வெள்ளித்திரைக்கு நாயகனாக அறிமுகமானார் சிவாஜி.
“பராசக்தி” திரைப்படத்தில் இவர் நாயகனாக நடிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரான பிஏ பெருமாள், சிவாஜியின் அபார நடிப்பாற்றலில் நம்பிக்கை கொண்டு, நடிகர் திலகத்தையே நாயகனாக்கி அழகு பார்த்தார்.
சரித்திரப் படங்கள், புராணப் படங்கள், சமூகப் படங்கள் என எந்த வகைப் படங்களாக இருந்தாலும், அந்தந்தப் படங்களில் வரும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து, அதற்கேற்ற உடல் மொழி, வசன உச்சரிப்பு, ஆடை, ஆபரணங்கள் என எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி, அவற்றை தத்ரூபமாக செய்து பார்க்க பெரும் முயற்சி எடுத்து கொள்ளும் ஒரு அர்பணிப்பு உள்ளம் கொண்ட கலைமேதையாக திகழ்ந்தவர் தான் நடிகர் திலகம் .
“கட்டபொம்மன்”, “கர்ணன்”, “அரிச்சந்திரா”, “ராஜ ராஜ சோழன்”, என ஒருபுறமும், “வ உ சிதம்பரம்பிள்ளை”, “மகாகவி பாரதியார்”, “பகத்சிங்”, “கொடி காத்த குமரன்” என மறுபுறமும், “சிவன்”, “ராமன்”, “கிருஷ்ணன்”, “நாரதர்” என இன்னும் ஒருபுறமும், “ஏழைப்பங்காளன்”, “ஜமீன்தார்”, “ரிக்ஷாக்காரன்”, “கிராமவாசி”, “போலீஸ் அதிகாரி”, “நீதிபதி”, “மருத்துவர்”, என வேறு ஒருபுறமும் என்று இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனும் அளவிற்கு நடிப்பின் அகராதியாய் வாழ்ந்து மறைந்தவர்தான் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
நேரம் தவறாமைக்கு சரியான உதாரணம் சிவாஜி கணேசன். ஐந்து மணிக்கு படப்பிடிப்பு என்றால், அரைமணி நேரத்திற்கு முன்பே படப்பிடிப்பு தளத்திற்கு ஆஜராகி விடுவதை தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து வந்த ஒரே நடிகராக இருந்து வந்தார்.
1961ம் ஆண்டு சென்னை அண்ணாசாலையில் “சாந்தி” தியேட்டரை கட்டி, அன்றைய தமிழக முதல்வராக இருந்த காமராஜர் அவர்களை வைத்து திறப்பு விழாவையும் நடத்தி முடித்தார் நடிகர் சிவாஜி. இந்த தியேட்டரில் வெளியிட்ட முதல் திரைப்படம் “பாவமன்னிப்பு”.
பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவில்லா அன்பு கொண்டவராகவும், இறுதிவரை அவரது தொண்டராகவும் இருந்தார். 1962ல் இந்தியா, சீனா போரின் போது அப்போதைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவை சந்தித்து ரூபாய் 40 ஆயிரம் யுத்த நிதியாக கொடுத்த முதல் இந்தியர் நடிகர் சிவாஜி கணேசன்.
தன்னை “பராசக்தி” திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைத்த தயாரிப்பாளர் பி ஏ பெருமாளின் வீட்டிற்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெற்று வருவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி கணேசன்.
தனது தாயார் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்று அமைத்தார். அதை திறந்து வைத்தது மக்கள் திலகம் எம்ஜிஆர். 1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த நடிகர் திலகம், 1961லிருந்து காங்கிரஸில் இணைந்து செயல்பட்டார். பெருந்தலைவர் காமராஜரின் மறைவிற்குப் பின் இந்திரா காங்கிரஸில் இணைந்து செயல்பட்டு வந்தார். 1982ல் பார்லிமென்ட் மேலவை உறுப்பினராகவும் ஆக்கப்பட்டார்.
1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறி, “தமிழக முன்னேற்ற முன்னணி” என்ற புதிய கட்சி ஒன்றையும் ஆரம்பித்தார் சிவாஜி.
“பத்மஸ்ரீ விருது”, “பத்மபூஷண் விருது”, “தாதா சாஹேப் பால்கே விருது”, “செவாலியே விருது” “கவுரவ டாக்டர் பட்டம்”, “அமெரிக்கா நயாகராவின் ஒரு நாள் நகர தந்தை” உட்பட ஏராளமான விருதுகளும், பட்டங்களும் இவரால் பெருமை அடைந்தன. தனது நீண்ட நெடிய இந்த கலைப் பயணத்தில், 270 தமிழ் படங்கள் உட்பட ஏறத்தாழ 300 படங்கள் வரை நடித்திருக்கின்றார்
மாபெரும் நடிகனாக, மொழியை உயிராய் மதித்த தமிழனாக, நாட்டின் சிறந்த பிரஜையாக, தேசபக்தியுள்ள இந்தியனாக வாழ்ந்து மறைந்த நடிப்புலக மேதை நடிகர் திலகம் “செவாலியே” சிவாஜி கணேசனின் நினைவு தினமான இன்று(ஜூலை 21) அவருடைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் நாம் பெருமை கொள்வோம்.
46 days ago
46 days ago