இரண்டு மொழிகளில் வெளியாகும் 'பர்தா'
‛பர்ஹானா' மற்றும் ‛புர்கா' படங்களை தொடர்ந்து இஸ்லாமிய பெண்களின் பிரச்னைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'பர்தா'. அனுபமா பரமேஸ்வரன், தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா கிருஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாகிறது. 'சினிமா பாண்டி', 'சுபம்' ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கி உள்ளார்.
ஆனந்த மீடியா பேனரின் கீழ் விஜய் டோங்கடா, ஸ்ரீனிவாசுலு பி.வி மற்றும் ஸ்ரீதர் மக்குவா ஆகியோர் தயாரித்துள்ளனர். மிருதுல் சுஜித் சென் ஒளிபதிவு செய்துள்ளார். கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். வருகிற 22ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் இளம்பெண்ணான சுப்பு தனது முகத்தை பர்தாவில் மறைத்து வைக்க வேண்டும் என்ற பாரம்பரியத்திற்கு கட்டாயப்படுத்தப்படுகிறாள். ஆனால், நகரத்தைச் சேர்ந்த தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா கிரிஷ் இருவரையும் சந்திக்கும்போது சுப்புவின் விதி மாறுகிறது. சுப்புவின் வாழ்வை சுற்றி இருக்கும் 'பாரம்பரிய' சுவர்களை உடைக்க அவர்கள் உதவுகிறார்கள்.
சமூகத்தைப் பிரதிபலிக்கும் கதையாக 'பர்தா' இருக்கிறது. பாரம்பரியம் என்ற பெயரில் தலைமுறை தலைமுறையாக பெண்களை கட்டிவைத்திருக்கும் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களை 'பர்தா' விமர்சிக்கிறது. அதேநேரத்தில் ஒற்றுமை, மாற்றத்திற்கான முன்னேற்றம் ஆகியவற்றையும் தைரியமாக பேசும் கதைக்களமாக 'பர்தா' உருவாகியிருக்கிறது என்றார்.