உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல்

‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல்

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஏ பீம்சிங் இயக்கத்தில், ஜெமினி கணேசன், சாவித்ரி நடித்த 'களத்தூர் கண்ணம்மா' படம் இன்றைய ஆகஸ்ட் 12ம் நாளில் 65 ஆண்டுகளுக்கு முன்பு 1960ம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். இதன்மூலம் இன்று 66வது ஆண்டில் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் கமல்.

இதில் 4 வயதான கமல், 'தென்னகத்து திரைவானுக்கு ஏவி.எம். அளிக்கும் குழந்தை நட்சத்திரம்' என்கிற டைட்டில் கார்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்தப் படத்தில் 'சுயம்புவாக' தந்த நடிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றார்.

தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, சிங்களம், ஹிந்தியிலும் ‛களத்துார் கண்ணம்மா' ரீமேக் ஆனது. இதில் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஒப்பந்தம் ஆனவர் டெய்சி ராணி என்பவர். படத்தை தயாரித்த ஏவி.மெய்யப்ப செட்டியார் வீட்டுக்கு கமல் சென்றபோது அவரின் சுட்டிதனத்தை பார்த்து வியந்து, அந்த படத்தில் நடிக்க வைத்து இருக்கிறார் மெய்யப்ப செட்டியார்.



குழந்தை நட்சத்திரமாக சில படங்கள், பின் இளம் வயதில் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் என நடித்து அதன்பின் கதாநாயகனாக உயர்ந்து இன்று வரை கதாநாயகனாகவே நடித்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளை உள்ளடக்கியவர் கமல்ஹாசன். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.

பல புதிய தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர். அவருடைய ரசிகர்கள் என்று சொல்லும் அளவிற்கு சினிமாவில் நிறைய பேர் உள்ளனர். தற்போது ராஜ்யசபா எம்.பி. ஆகவும் பதவி வகித்து வருகிறார்.

அவரது 65 வருட திரையுலக பயணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் அவரை குழந்தை நட்சத்திரமாக 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் அறிமுகப்படுத்திய ஏவிஎம் நிறுவனம் அப்படத்தின் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு, “65 வருடங்களுக்கு முன்பு 'களத்தூர் கண்ணம்மா' படம் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமாகி மில்லியன் கணக்கானவர்களின் இதயத்தைத் தொட்டவர். நமக்கு உணர்வுகளையும், இசையையும் மற்றும் ஒரு குழந்தை மேதை கமல்ஹாசனையும் அளித்த திரைப்படம். தமிழ்த் திரையுலகத்தில் ஒரு மைல் கல், என்றென்றும் நினைவில் நிற்கும்,” என வாழ்த்தியுள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !