என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா
நாடு முழுக்க தெரு நாய் கடிகள் சம்பவமும், அதனைத் தொடர்ந்து ரேபிஸ் நோய் பாதிப்புகளும் அதிகமாகி உள்ளன. இதனால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. குறிப்பாக டில்லியில் நிகழ்ந்த சம்பவத்தால் சுப்ரீம் கோர்ட் தானாக முன் வந்து வழக்கை எடுத்ததோடு இரு தினங்களுக்கு முன் ‛‛டில்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு ஆதரவு இருந்தாலும் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. டில்லியில் இதை எதிர்த்து சில போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நடிகை சதா அழுதபடி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‛‛6 வயது குழந்தை இறக்க காரணம் ரேபிஸ் நோய் அல்ல என நிரூபணம் ஆன பின்னரும் கூட நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. எப்படி அரசால் 3 லட்சம் நாய்களுக்கு காப்பகத்தில் அடைக்கலம் தர முடியும். நிச்சயம் அவைகளை கொல்லத்தான் போகிறார்கள். நாய்களுக்கு போதிய கருத்தடை ஊசி போடாதது மாநில அரசு மற்றும் நகராட்சியின் தோல்வி. அதற்காக நாய்களை தண்டிப்பது சரியா. வீட்டில் நாய் வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டு அழகான நாயை வாங்குபவர்களால் ஒரு தெருநாயின் வாழ்வதற்கான உரிமை பறிக்கப்படுகிறது. கடைசியில் அதை பராமரிக்க முடியாமல் தெருவில் விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் விலங்குகள் நல பிரியர்கள் என சொல்லாதீர்கள். நீதிமன்ற உத்தரவை தடுக்க முடியாது. என்ன செய்வது என தெரியவில்லை. என் இதயமே நொறுங்கிவிட்டது. நாய்களை காக்க தவறிய இந்த நாடு வெட்கப்பட வேண்டும்'' என ஆதங்கத்துடன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.