உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா

எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா

பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரு மகன்கள் உள்ள நிலையில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டலாவை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்தார். தற்போது ஜாய் கிரிஸ்டலா கர்ப்பமாக உள்ள நிலையில் ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‛‛நாங்கள் திருமணம் செய்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரே வீட்டில் ஒன்றாக வசித்தோம். கர்ப்பமாக இருக்கும் என்னை அவர் ஏமாற்றிவிட்டார். என் குழந்தைக்கு அவர் பதில் சொல்ல வேண்டும்'' என தெரிவித்தார்.

தொடர்ந்து வலைதளத்தில் கிரிஸ்டலாவிடம் ரங்கராஜ் கொஞ்சும் பேசும் வீடியோ மற்றும் நெருக்கமான போட்டோக்களை கிரிஸ்டலா வெளியிட்டார். இந்நிலையில் அவர் முதல்வரிடம் கோரிக்கை ஒன்றை வைத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‛‛மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை, கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து பத்து நாட்கள் ஆகிவிட்டது. எந்த முன்னேற்றமும் இல்லை. நான் தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். பார்வையற்ற தனது தாய் உடன் சென்று புகார் அளித்தேன். ஆனால் ரங்கராஜிற்கு விஐபி அந்தஸ்து அளிக்கப்படுகிறது. வலைதளங்களில் எனக்கு எதிராக தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார். என்னை போன்ற பெண்கள் உங்கள் அரசை நம்புகிறோம் அப்பா(முதல்வர் ஸ்டாலின்). இதில் நீங்கள் தலையிட்டு நியாயம் பெற்றுத்தர வேண்டும் என கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன். எந்த விஐபியும், ஒரு பிரபலமும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்துவிட்டு, எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுற்றித் திரிய முடியுமா? என் வயிற்றில் உள்ள குழந்தைக்கும், எனக்கும் நீதி வேண்டும்'' என தெரிவித்து ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஸ்டாலினுக்கும், சென்னை போலீஸ் கமிஷனருக்கும் டேக் செய்துள்ளார் கிரிஸ்டலா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !