உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு

அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு


நடிகை ஐஸ்வர்யா ராயின் படத்தை பயன்படுத்தி, தங்கள் தயாரிப்பு பொருட்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வது பல நிறுவனங்களின் உத்தியாக உள்ளது. இதற்கு அவரது ஒப்புதல் அவசியம். ஆனால், பல நிறுவனங்களும், இணைய தளங்களும், ஐஸ்வர்யா ராயிடம் எந்த அனுமதியும் பெறாமல், அவரது படத்தை பயன்படுத்தி விளம்பரம் செய்வது அதிகரித்துள்ளது.

இதனால் தன்னுடைய தனியுரிமை, விளம்பர உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று கோரி ஐஸ்வர்யா ராய், டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தன் அனுமதியின்றி தன் பெயர், படங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், தன் போலவே உருவத்துடன் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி ஆபாசமாக படங்கள் உருவாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட படங்கள், ஆன்லைனில் பரவி வருவதாகவும், சிலர் அதை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

'தன் கட்சிக்காரரின் பெயர், படத்தை பயன்படுத்த யாருக்கும் உரிமையில்லை. யாரோ ஒருவரின் பாலியல் இச்சைக்காக தன் கட்சிக்காரரின் பெயர் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்று அந்த மனுவில் அவரது வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் படத்துடன் கூடிய வால் பேப்பர்களை விற்பனை செய்யும் இணைய தளங்கள், மனுவில் பட்டியலிடப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி வீடியோ தயார் செய்த யூடியூப் சேனல்களும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வழக்கை கேட்ட நீதிபதி தேஜஸ் கரியா, எதிர் மனுதாரர்களை எச்சரிக்கும் வகையில் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக நவ.,7ம் தேதி இணைப்பதிவாளர் முன்னிலையில் வர உள்ளது. ஜன.,15ம் தேதி முன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !