தயாரிப்பு நிறுவனம் துவங்கிய 'மின்னல் முரளி' இயக்குனர்
மலையாள திரையுலகில் 'குஞ்சிராமாயணம்' என்கிற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பஷில் ஜோசப். அதைத் தொடர்ந்து 'கோதா' மற்றும் சூப்பர்மேன் கதை அம்சம் கொண்ட 'மின்னல் முரளி' ஆகிய படங்களை இயக்கினார். இதில் மின்னல் முரளி திரைப்படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேசமயம் அந்த படம் இயக்குவதற்கு முன்பே நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த பஷில் ஜோசப் தொடர்ந்து கதையின் நாயகனாகவும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்து பிசியான நடிகராக மாறினார்.
மின்னல் முரளி படம் வெளியாகி நான்கு வருடங்களுக்கு பிறகும் இன்னும் டைரக்ஷன் பக்கம் திரும்ப முடியாமல் தொடர்ந்து நடித்து வருகிறார் பஷில் ஜோசப். இதில் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, குருவாயூர் அம்பல நடையில், சூட்சும தர்ஷினி' உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன, இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் பஷில் ஜோசப். இவரது நிறுவனத்திற்கு பஷில் ஜோசப் என்டர்டெயின்மென்ட் என பெயர் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதுவரை நான் ஒருபோதும் செய்திராத பட தயாரிப்பு விஷயத்தை முயற்சித்து பார்க்க போகிறேன். இப்போதும் இதை எப்படி செய்யப் போகிறேன் என்று தெரியாது. ஆனால் மிகச்சிறந்த கதைகளை, துணிச்சலான கதைகளை புதிய வழிகளில் சொல்ல வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறேன். இந்த புதிய பாதை நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது என பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.
பஷில் ஜோசப்பின் நண்பரும் அவருடைய டைரக்சனில் கோதா மற்றும் மின்னல் முரளி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவருமான டொவினோ தாமஸ், “அப்படி என்றால் உன்னுடைய தயாரிப்பில் முதல் படத்தில் நான் கதாநாயகன் இல்லையா ?” என்று ஜாலியாக தனது அடுத்த படத்திற்கான வாய்ப்புக்கு அடி போட்டுள்ளார்.