பிளாஷ்பேக்: சிந்து பைரவிக்கு 40 வயது
 
கே.பாலச்சந்தரும், இளையராஜாவும் இணைந்து பெற்றெடுத்த 'சிந்து பைரவி'க்கு இந்த ஆண்டுடன் 40 வயதாகிறது. தேசிய விருதுகள், மாநில விருதுகள், வெற்றி விழாக்கள் என 1985ம் ஆண்டு ஒரு இசை ஆண்டாகவே இருந்தது. திரைப்படங்களில் கிராமிய பாடல்களை கொண்டு வந்த இளையராஜா கர்நாடக சங்கீதத்திலும் வெற்றிக் கொடி நாட்டிய படம்.
கர்நாடக சங்கீதத்தை களமாகக் கொண்டு வந்த படங்கள் வெகு குறைவாகத்தான் இருக்கும். அந்த படங்களில் முக்கியமானது 'சிந்து பைரவி'. ஒரு இசை கலைஞனின் குடிபழக்கம், மனைவி தவிர்த்த இன்னொரு பெண்ணுடன் தொடர்பு என்கிற சாதாரண கதைதான். ஆனால் அதை காவியமாக்கியது பாலச்சந்தரின் இயக்கமும், இளையராஜாவின் இசையும், சிவகுமார், சுஹாசினி, சுலக்ஷனா நடிப்பும்.
சிவகுமார் ஜே.கே.பியாக வாழ்ந்தார். சிந்துவாக சுஹாசினி தேசிய விருதுக்கு தன்னை உடையவராக்கிக் கொண்டார். பைரவியாக சுலக்ஷணா. அப்பாவி. அன்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அப்படித் தெரிந்தால் அது சமையலும் கணவனின் உடல்நலமுமாகத்தான் இருக்கும். மிக அழகாக, நேர்த்தியாக, கண்களாலும் உடல்மொழியாலும் பிரமாதப்படுத்தியிருப்பார் சுலக்ஷணா.
'மஹாகணபதிம்', 'மரிமரி நின்னே', 'நானொரு சிந்து', 'பாடறியேன்', 'பூமாலை வாங்கி வந்தால்', 'கலைவாணியே...' சிந்து பைரவியின் பாடல்கள் இப்போதும் நம்மை தாலாட்டிக் கொண்டிருக்கிறது.
1985ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி வெளியானது 'சிந்து பைரவி'. படம் வெளியாகி 40 வருடங்களாகின்றன. 'சிந்து பைரவி' தொட்ட சிகரத்தையும் இயக்குநர் சிகரத்தையும் இனி ஒரு படம் தொட முடியுமா என்பது சந்தேகமே.