உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கல்கி 2ம் பாகத்தில் தீபிகா இல்லை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

கல்கி 2ம் பாகத்தில் தீபிகா இல்லை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு


நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி கடந்த வருடம் வெளியான படம் 'கல்கி 2898 ஏடி'. இந்தப் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகிறது. அதற்கான பணிகள் நடந்து வரும் சூழலில், 2ம் பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்கவில்லை என தயாரிப்பு நிறுவனமான விஜயாந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில், ''கல்கி 2898 ஏடி படத்தின் அடுத்த பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்க மாட்டார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். கவனமாக பரிசீலித்த பிறகு, தீபிகாவும் கல்கி ஏடி குழுவும் தனித்தனி பாதையில் செல்ல முடிவு செய்திருக்கிறோம். முதல் பாகத்தை உருவாக்கும் நீண்ட பயணம் இருந்தபோதிலும், எங்களால் ஒரு கூட்டணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கல்கி போன்ற ஒரு படம் அந்த அர்ப்பணிப்புக்கும் இன்னும் பலவற்றிற்கும் தகுதியானது. தீபிகாவின் எதிர்காலப் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முதல் பாகம் எடுக்கும்போதே 2ம் பாகத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்கின்றனர். அதில் தீபிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை போதுமான அளவிற்கு எடுத்திருந்து, அதனை மட்டும் தற்போது பயன்படுத்த படக்குழு முடிவு செய்திருக்கலாம்.

ஏற்கனவே, சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க இருந்த 'ஸ்பிரிட்' படத்தில் இருந்தும் தீபிகா விலகியிருந்தார். அந்த படமும் இன்னும் துவங்கவில்லை.

கடந்த வருடம் குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் நடிக்க ஆறு முதல் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்வேன் என தீபிகா 'கண்டிஷன்' போட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. அதன் காரணமாக 'ஸ்பிரிட்' படக்குழுவுக்கும் இவருக்கும் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அவர் படத்தில் இருந்து விலகினார். தற்போது கல்கி 2ம் பாகத்திலும் அவர் நீக்கப்பட்டிருப்பதும் தீபிகாவின் கண்டிஷன் காரணமாக இருக்கலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !