'லடாக்' படப்பிடிப்பில் சல்மான்கானின் காயம் ; படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான 'சிக்கந்தர்' படத்தை தொடர்ந்து சல்மான்கான் நடிப்பில் அடுத்து ஹிந்தியில் உருவாகி வரும் படம் 'பேட்டில் ஆப் கல்வான்'. கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இயக்குனர் அபூர்வா லகியா இந்த படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக லடாக் பகுதியில் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 45 நாட்கள் அங்கே நடைபெற்ற படப்பிடிப்பில் சல்மான் கான் 15 நாட்கள் கலந்து கொண்டு நடித்தார்.
அதே சமயம் அங்கே நிலவிய அதிக குளிர் சீதோசன நிலை ஒரு பக்கம் பாதிப்பு என்றால் இன்னொரு பக்கம் படப்பிடிப்பின் போது சல்மான்கானுக்கு சின்ன சின்ன காயங்களும் ஏற்பட்டது. இதனால் ஒரு குறுகிய கால ஓய்வு எடுத்துக் கொண்டு சிகிச்சை பெறுவதற்காக மும்பை திரும்பியுள்ளார் சல்மான் கான். இதனைத் தொடர்ந்து விரைவில் மும்பையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. சிகிச்சை முடிந்த பிறகு இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சல்மான் கான் கலந்து கொள்ள இருக்கிறாராம்.