கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் தப்பிய விஜய் தேவரகொண்டா
தெலுங்கு இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா அதிகம் இளம் ரசிகர்களை கொண்டவர். சமீபத்தில் தான் அவருக்கும் அவரது நீண்ட நாள் தோழியான நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் நேற்று விஜய் தேவரகொண்டா தனது காரில் பயணித்த போது ஏற்பட்ட விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
ஆந்திராவில் உள்ள ஜோக்லம்பா காட்வா மாவட்டத்தில் இருக்கும் உண்டவள்ளி என்கிற பகுதியில் விஜய் தேவரகொண்டா காரில் வந்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த வாகனம் திடீரென எதிர்பாராத விதமாக திரும்பியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விஜய் தேவரகொண்டாவின் லெக்சஸ் காரின் இடது முன்புறம் மிகுந்த சேதம் அடைந்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
அதே சமயம் இந்த சம்பவம் குறித்து விஜய் தேவரகொண்டா வெளியீட்டுள்ள பதிவில், “எல்லாமே நன்றாக இருக்கிறது. கார் சின்ன மோதலுக்கு ஆளானது. ஆனால் நாங்கள் நன்றாக இருக்கிறோம். இப்போதுதான் எனது ஒர்க் அவுட்டை செய்து முடித்துவிட்டு வீட்டிற்கும் திரும்பினேன். தலை கொஞ்சம் வலிக்கிறது. ஆனால் ஒரு பிரியாணியும் தூக்கமும் இதை சரி பண்ணிவிடும் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. தயவு செய்து இது குறித்து நீங்கள் மனதை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்” என்று கூறியுள்ளார்.