நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன்
'பைசன்' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன். கதைப்படி அவர் திருநெல்வேலியைச் சேர்ந்த ராணி என்ற கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார். அந்த அனுபவம் குறித்து அவர் பேசுகையில், ''பரியேறும் பெருமாள் படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. ஆனால் அது நடக்கவில்லை. எனக்கு மட்டுமல்ல என் அப்பாவுக்கும் மிகவும் பிடித்த படமாக அது இருந்தது. மாரி செல்வராஜ் இயக்கும் படங்களின் டிரைலர், டீசர் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை கூட ஆர்வமாக பார்ப்பேன். இந்த படத்திற்காக அழைப்பு வந்தபோது மறுக்காமல் ஒத்துக் கொண்டேன்.
'பிரேமம்' படத்தில் நடித்த போது எனக்கு ஒரு மன நிறைவு கிடைத்தது, நிறைய கற்றுக் கொண்டேன். அந்த அனுபவம் பைசன் படத்திலும் கிடைத்தது. திருநெல்வேலியில் வயலில் இறங்கி நாட்டு நடுவது, செங்கல் சூளையில் வேலை செய்வது என பல புதிய அனுபவங்கள் கிடைத்தன. அந்த மக்களோடு பழகியதும் மகிழ்ச்சி. ஹீரோ அக்காவாக நடித்த ரஜிஷா விஜயனும் நானும் நெருங்கிய தோழிகள் ஆகி விட்டோம். மறக்க முடியாத பல அனுபவங்களை பைசன் தந்தது'' என்றார்.