நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம்
அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட், நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் சமீர் நாயர், தீபக் சைகல், பா.ரஞ்சித், அதிதி ஆனந்த் இணைந்து தயாரித்துள்ள படம் 'பைசன்'. துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் கதை நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர், லால், அழகம்பெருமாள், ரேகா நாயர், லிஸி ஆண்டனி, சுபத்ரா ராபர்ட் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு வரும் 17ம் தேதியன்று திரைக்கு வரும் இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் துருவ் பேசியதாவது: இந்த படத்தில் பணியாற்றியது, எனக்கு இன்னொரு உலகத்தை காட்டியது. பசுபதி என் தந்தையின் முதல் படத்தில் வில்லனாகவும், அடுத்த படத்தில் அண்ணனாகவும், 'பைசன்' படத்தில் எனக்கு தந்தையாகவும் நடித்ததை ஸ்பிரிச்சுவல் சைக்கிளாகவே பார்க்கிறேன்.
என் சிறுவயது முதலே அம்மா பெருமிதப்படும் அளவுக்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். படிப்பின் மூலம் அதை நிறைவேற்ற முடியவில்லை. இந்த படத்தை அவர் பார்த்தால், கண்டிப்பாக பெருமிதப்படுவார் என்று நம்புகிறேன். 'பைசன்' படத்தில் இயல்பாக நடிக்க, நான் என்னை நிறைய மாற்றிக் கொள்ள வேண்டியது இருந்தது.
இந்த படத்தில் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறேன். கடினமான காட்சிகளில் நடிக்கும்போது, எனது தந்தை விக்ரம் கண்முன் நிற்பார். அவர் அந்தளவுக்கு கஷ்டப்படும்போது, நம்மால் சிறிய அளவில் கூட முயற்சிக்க முடியாதா என்று யோசிப்பேன். என்னால் விக்ரம் போல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அவரது மகனாக இருக்க என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை. ஆனாலும் நடிப்பில் அவரை வெல்ல தொடர்ந்து போராடுவேன். அந்த தகுதியை அடைய எல்லா வேலைகளையும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.