பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்'
1950களில் வெளிவந்த முக்கியமான படம் 'மாங்கல்யம்'. பின்னாளில் புராண படங்களின் மூலம் புகழ்பெற்ற ஏ.பி.நாகராஜன், நாவலர் நாகராஜன் என்ற பெயரில் இந்த படத்தில் நாயகனாக நடித்தார். அவருடன், ராஜசுலோச்சனா, பி.எஸ். சரோஜா, எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.நடராஜன், சி.டி. ராஜகாந்தம், பி.எஸ். ஞானம், ருஷ்யேந்திரமணி, வி.எம்.ஏழுமலை, கே.வி.சீனிவாசன், அ.கருணாநிதி, திருச்சி டி.எம்.லோகநாதன், எஸ்.ஆர்.தசரதன், எஸ்.மோகனா விஜயகுமாரி, பி.கனகா, எம்.எம்.ஏ. சின்னப்ப தேவர் ஆகியோர் நடித்தனர்.
கே.சோமு இயக்கிய இந்தப் படத்திற்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார், ராஜா பிலிம்ஸ் சார்பில் வேம்பு தயாரித்திருந்தார். இந்த படம் முதலில் அறிவிக்கப்பட்டபோது பி.எஸ்.சரோஜா நாயகியாக அறிவிக்கப்பட்டிருந்தார். படம் தொடங்குவதற்கு சற்று தாமதமான சூழலில் அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ராஜசுலோச்சனாவை படத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினார் தயாரிப்பாளர் வேம்பு.
அதற்கேற்ப கதையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டது. இதை கேள்விப்பட்ட சரோஜா தான் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக கூறினார். அதன் பின் திரையுலகினர் சமாதானப் பேச்சு நடத்தினர். தயாரிப்பாளர் படத்திற்காக நிறைய செலவு செய்து விட்டார். ராஜசுலோச்சனா நடித்தாலும் உங்கள் கேரக்டரில் மாற்றம் இருக்காது, உங்களுக்கான முக்கியத்தும் படத்தில் இருக்கும் என்று சரோஜாவை சமாதானப்படுத்தினர். படம் தயாரானதும், 'இரு நாயகிகள் கலக்கும்' படம் என்று விளம்பரம் செய்தனர். படமும் வெற்றி பெற்றது.