காந்தாரா வராஹரூபம் பாடலுக்கு நடனம் ஆடிய பார்வதி ஜெயராம்
கன்னடத்தில் வெளியான 'காந்தாரா' திரைப்படத்தின் வெற்றிக்கு அதில் இடம்பெற்ற வராஹரூபம் பாடலும் ஒரு முக்கிய காரணம். இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் இந்தப் பாடலுக்கு உணர்வுபூர்வமாக இசை வடிவம் கொடுத்திருந்தார். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'காந்தாரா ; தி லெஜன்ட் சாப்டர் 1' என்கிற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஜெயராமின் மனைவியும் நடிகையும் முன்னாள் மலையாள நடிகையுமான பார்வதி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்த வராஹரூபம் பாடலுக்கு மேடையில் நடனம் ஆடி உள்ளார்.
இது குறித்த வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள பார்வதி ஜெயராம் கூறும்போது, “காந்தாரா படம் வெளியான நாளிலிருந்து இந்த வராஹரூபம் இசை எனக்குள் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது காந்தாரா சாப்டர் 1 வெளியான பிறகு அது இன்னும் எனக்குள் அதிகமாக உயிர்ப்பித்து தெய்வீகத்தை பரப்பத் துவங்கியுள்ளது. இப்படி ஒரு அற்புதமான தெய்வீக இசையை கொடுத்த இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத், இப்படி ஒரு காட்சியை உருவாக்கிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி, அழகாக காட்சிப்படுத்திய அரவிந்த் எஸ் காஷ்யப் ஆகியோருக்கு இதை பணிவுடன் அர்ப்பணிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.