சமுத்திரக்கனிக்கு இயக்குனர் பிரியதர்ஷன் சொன்ன அறிவுரை
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'காந்தா'. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் இந்த படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கொச்சியில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி ஏற்கனவே மோகன்லால் உடன் 'சிகார்' மற்றும் 'ஒப்பம்' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் மலையாள ரசிகர்களுக்கு ரொம்பவே அறிமுகமானவர்.
இந்த நிலையில் பிரியதர்ஷன் இயக்கிய 'ஒப்பம்' திரைப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடித்தபோது பிரியதர்ஷன் தன்னிடம் சொன்ன ஒரு விஷயத்தை இந்த நிகழ்வில் குறிப்பிட்டு பேசினார் சமுத்திரக்கனி.
இதுபற்றி அவர் கூறும்போது, “ஒப்பம் படப்பிடிப்பில் நடித்து முடித்த பிறகு பிரியதர்ஷன் என்னிடம், கேரளாவில் உள்ள ரசிகர்கள் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். உங்களுக்காக வெற்றி கொஞ்சம் லேட்டாக வந்தாலும் வரட்டும்.. ஆனால் ஒருபோதும் தவறான படங்களை தேர்ந்தெடுக்காதீர்கள்.. எப்போதும் நல்ல கதைகளையே தேர்ந்தெடுத்து நடியுங்கள்” என்று கூறினார். தற்போது இந்த காந்தா என்கிற ஒரு அருமையான கதையுடன் மீண்டும் மலையாளத்திற்கு வந்திருக்கிறேன். எந்த மொழியாக இருந்தாலும் ரசிகர்கள் நிச்சயம் நல்ல படத்தை பாராட்டுவார்கள்” என்று கூறினார்.
காந்தா படப்பிடிப்பில் துல்கர் சல்மானுடன் நடித்த அனுபவம் பற்றி சமுத்திரக்கனி கூறும்போது, “துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த காட்சிகளில் எல்லாம், ஒருபோதும் நான் முதல் டேக்கிலேயே ஓகே செய்ததில்லை. காரணம் துல்கர் சல்மான் நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டு வியந்து போய் பார்த்துக் கொண்டிருந்தேன். இதை கவனித்த இயக்குனர் செல்வமணி செல்வராஜ் கூட, அடிக்கடி நீங்கள் துல்கர் சல்மானையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.. சரிதானே என்று கேட்கும் அளவிற்கு அவருடன் நடித்த அனுபவம் மறக்க முடியாது” என்று கூறினார்.