இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை
சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வெள்ளகுதிர'. இந்த படம் சர்வதேச அளவில் 62 விழாக்களில் நாமினேட் செய்யப்பட்டு, 54 விருது பெற்றுள்ளது. படம் குறித்து இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார் பேசுகையில், ‛‛எங்கள் ஊருக்கும் மேல் இருக்கும் மலைப்பகுதியில் ரோடு இல்லாமல் ஜனங்கள் படும் கஷ்டத்தை வைத்து ஒரு படம் பண்ணுங்க என்று தயாரிப்பாளரும், நடிகருமான ஹரிஷ் ஓரி கேட்டார். அதை ஏற்று அங்கு ஒரு மாதம் தங்கி அவர்கள் படும்பாட்டை பார்த்து படத்தை இயக்கி இருக்கிறேன். வெள்ளகுதிர படத்தை பொறுத்தவரையில் இந்த கதை தான் என்னை இயக்குனராக தேர்ந்தெடுத்தது. முன்னோர்கள் பற்றிய கதையாக இதை எடுத்து இருக்கிறேன் என்றார்.
படம் குறித்து இயக்குனர் கே பாக்யராஜ் பேசுகையில், ‛‛வெள்ள குதிர படத்தின் நாயகன் ஹரிஷ் ஒரி நடிப்பதற்காகவே ஊரை விட்டு வந்து 13 வருடமாக கூத்துப்பட்டறை கலைஞனாக நடித்து அனுபவம் பெற்று, சிரமப்பட்டு இருக்கிறார். நடைபாதை இல்லாத மலை உச்சியில் 13 கிலோமீட்டர், 5 முறை மலை ஏறி படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். அது லேசான காரியம் இல்லை. அந்த அளவுக்கு சிரத்தை எடுத்து 48 நாட்கள் அங்கு தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். இந்த உழைப்பு வெற்றியை தேடி தரும்'' என்றார்.