கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம்
இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் உள்ள பான்ஜியில் நேற்று தொடங்கியது. விழாவை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். வருகிற 28ம்தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில் சிவகார்த்திகேயனின் 'அமரன்', அப்புக்குட்டியின் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' மற்றும் இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள 'ஆநிரை' என்ற குறும்படம் ஆகியவை திரையிடப்பட உள்ளன.
நேற்று நடந்த துவக்க விழாவில் கொரிய குடியரசின் தேசிய அவை உறுப்பினர் ஜேவோன் கிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் ஜாஜு, கூடுதல் செயலாளர் பிரபாத், விழா இயக்குனரும், தயாரிப்பாளருமான சேகர் கபூர், நடிகர் அனுபம் கெர், வேவ்ஸ் பஜாரின் ஆலோசகர் ஜெரோம் பைலார்ட், ஆஸ்திரேலிய திரைப்பட இயக்குனர் கார்த் டேவிஸ், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் பிரகாஷ் மக்தூம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், ரஜினிக்கும், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கும் சிறப்பு கவுரவம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த விழாவில் பாலகிருஷ்ணாவுக்கு கவுரம் வழங்கப்பட்டது. ரஜினிக்கு விழா நிறைவுநாளில் வழங்கப்படுகிறது.
அதோடு மறைந்த திரைப்பட இயக்குனர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் சலீல் சவுத்ரி ஆகியோரின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்படுகிறது.