உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம்

ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம்

பாலிவுட்டின் மூத்த ஜாம்பவான் நடிகரான தர்மேந்திரா சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இந்தியாவெங்கிலும் இருந்து அவருக்கு பலரும் புகழஞ்சலி செலுத்தி உள்ளனர். பலர் அவருடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மலையாள திரையுலகைச் சேர்ந்த இயக்குனர் எம் பத்மகுமார், தர்மேந்திராவை சந்தித்து உரையாடிய அனுபவம் குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் கடந்த 2022ல் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஜோசப் என்கிற படத்தை இயக்கியவர். இந்த படத்தை ஹிந்தியில் தர்மேந்திராவின் மகன் சன்னி தியோலை வைத்து தற்போது ரீமேக் செய்துள்ளார். படம் தொடர்பாக பேச சென்றபோது தான் தர்மேந்திராவை முதல்முறையாக சந்தித்தேன் என்று கூறியுள்ளார் பத்மகுமார்.

இது குறித்து அவர் கூறும்போது, ‛‛ஜோசப் ரீமேக்கை சன்னி தியோலை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்யலாம் என முடிவு செய்த பின்னர் ஹிந்தியில் அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் கமல்ஜி, தர்மேந்திரா குடும்பத்திற்காக ஜோசப் படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்து அவர்களது வீட்டில் திரையிட்டு காட்டினார். படம் அவர்களுக்கு பிடித்து விட்டது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் ஒரு நாற்காலியில் அமர்ந்த தர்மேந்திரா அனைவரையும் அமரச் சொன்னார். நான் எல்லோருக்கும் கடைசியாக பின்னாடி வந்து கொண்டிருந்தேன். என்னை பார்த்ததும் எழுந்து நின்று கைநீட்டி வரவேற்று என்னை அணைத்தபடி வெல்டன் பேட்டா.. வெல்டன்.. என்று கூறினார்.

அப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான் மனிதரிடமிருந்து பாராட்டு கிடைத்தது என் வாழ்நாள் சாதனை என்று சொல்லலாம். அதன் பிறகு இரண்டு மூன்று முறை இது தொடர்பாக அவரது வீட்டிற்கு சென்றபோது அவருடன் உரையாடினேன். மோகன்லால், மம்முட்டி பற்றியெல்லாம் விசாரிப்பார் தர்மேந்திரா. ஜோசப் ஹிந்தி ரீமேக்கை முடித்து விட்டோம். வரும் டிசம்பரில் தர்மேந்திரா பிறந்தநாளில் இதன் டைட்டிலை அறிவிக்கலாம் என திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதற்குள் அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டார் நிச்சயமாக அவருடைய ஆசீர்வாதங்கள் எங்களுடன் இருக்கும்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !