பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்”
திருவிதாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்படும் லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும், ஆரம்ப காலங்களில் வெள்ளித்திரையின் வெளிச்சத்தில் நடன மங்கைகளாகவே தங்களது கலைப்பணியை ஆரம்பித்திருந்தனர். “வேதாள உலகம்”, “மோகினி”, “போஜன்”, “பக்த ஜனா”, “ஆதித்தன் கனவு”, “மகாபலி”, “கோகுல தாஸி”, “வாழ்க்கை”, “நாட்டிய ராணி”, “மங்கையர்க்கரசி”, “கன்னியின் காதலி”, “மந்திரிகுமாரி”, “விஜயகுமாரி” என 1950களில் வெளிவந்த பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் இவர்களது நடனம் இல்லாத திரைப்படங்களே இல்லை எனும் அளவிற்கு இவர்களது நாட்டியம் தமிழ் திரையுலகின் ஓர் அங்கமாகிப் போயிருந்தது.
தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடன மங்கையாகவே கலையுலகில் பயணித்து வந்த மூவரில் ஒருவரான நடிகை பத்மினி, 1951ம் ஆண்டு கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த “மணமகள்” என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் ஒரு கதையின் நாயகியாக அறிமுகமானார்.
நம் தமிழகத்து நங்கையர்கள் “நல்ல பெண்மணி” என வாழ்வதற்குரிய இலக்கணங்களை எடுத்துரைக்கும் ஈடில்லா திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “மணமகள்”. விபச்சாரத்தை சாகுபடி செய்யும் சண்டாளர்களின் சதி வேலைகளைக் கூட, ஒரே ஒரு பெண் சந்திக்கு இழுத்து சரித்து விடமுடியும் எனும் பெண் வலிமையைக் கூறும் பெருமை நிறைந்த கதை “மணமகள்” என்று இத்திரைப்படத்திற்குச் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது அன்றைய நாளில்.
பாட்டு சொல்லிக் கொடுக்க வந்த பாகவதனிடம் குருபக்தி குமாரிக்கு. அந்த பக்தியைக் காதலாக கனிய வைத்து விடுகின்றான் பாகவதன். காதலன் சந்திரனைப் புறக்கணித்துவிட்டு பாகவதனை மணக்கின்றாள் குமாரி. ஆனால் காதலனையும் மறக்க முடியாமல் தவிக்கின்றாள். பாகவதனின் பகல் வேஷத்தைக் கண்டு வாழ்நாளெல்லாம் மணமகளாகவே இருப்பேன். மனைவியாக மாட்டேன் என்று பாகவதனின் ஸ்பரிசம் படாமல் வாழ்கின்றாள் குமாரி. பணத்துக்காக குமாரி. சுகத்துக்காக விஜயா என வாழ்கின்றான் பாகவதன்.
அதுவரை படங்களில் நாட்டியம் மட்டுமே ஆடிக் கொண்டிருந்த பத்மினி, கதையின் நாயகியாக, குமாரி என்ற கதாபாத்திரத்திலும், அவரது சகோதரி லலிதா, விஜயா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். பாகவதனாக நடிகர் டி எஸ் பலையாவும், பத்மினியின் காதலனாக எஸ் வி சகஸ்ரநாமமும் நடித்திருந்த “மணமகள்” திரைப்படம், 1951ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்று, நடிகை பத்மினியின் தமிழ் திரையுலகப் பயணத்திற்கு ஒரு வலுவான பாதையை அமைத்துத் தந்த திரைப்படமாகவும் அமைந்திருந்தது.