இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா
நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, சில வருடங்களில் கருத்து வேறுபாடால் 2021ல் பிரிந்தார். பின்னர், நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவை மறுமணம் செய்துகொண்டார். இதற்கிடையே தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் மீண்டு வந்த நடிகை சமந்தா, 'பேமிலி மேன், சிட்டாடல்: ஹனி பன்னி' வெப் தொடர்களில் நடித்தார். அப்போது, அதன் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொருவுடன் சமந்தாவுக்கு நட்பு ஏற்பட்டது.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பொதுவெளியில் இருவரும் ஜோடியாக திரிவது, காதல் கிசுகிசுக்களை உண்மையாக்கின. சமீபத்தில் கூட இருவரும் கட்டிப்பிடித்தவாறு சமூக வலைதளத்தில் வெளியிட்டார் சமந்தா. ராஜ் நிடிமொருவும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். ஸ்யாமலி டே என்பவரை திருமணம் செய்து 2022ல் விவாகரத்து பெற்றிருந்தார். அதன்பிறகே இவர்களுக்குள் காதல் உதயமானது.
இந்த நிலையில், ராஜ் நிடிமொருவின் முன்னாள் மனைவி ஸ்யாமலி டே, தனது சமூக வலைதளத்தில் யாரின் பெயரையும் குறிப்பிடாமல், ''விரக்தியடைந்த மக்கள் அவநம்பிக்கையான செயல்களைச் செய்கிறார்கள்” என சமந்தா மற்றும் ராஜ் ஜோடியை மறைமுகமாக விமர்சித்து ஒரு பதிவு போட்டிருந்தார். இதற்கிடையே, சமந்தா - ராஜ் ஜோடி, இன்று (டிச.1) கோவை ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்தி வெளியானது.
இந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி ஆலயத்தில் சமந்தா - ராஜ் நிடிமொரு 2வது திருமணம் செய்து கொண்டனர்.