உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ?

சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ?

ஒரு படம் தயாரிக்க பைனான்சியர்களிடம் பைனான்ஸ் வாங்கியோ, அல்லது தங்களிடம் இருக்கும் சொந்தப் பணத்தை வைத்தோ தான் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரிப்பார்கள். முன்னணி நடிகர்களின் படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானால் அந்தக் காலத்தில் வினியோகஸ்தர்கள் தியேட்டர்காரர்கள் அட்வான்ஸ் தொகை கொடுப்பார்கள். அதை வைத்து படத்தை ஆரம்பித்து பின் படம் முடிந்ததும் அந்த அட்வான்ஸ் தொகையைக் கழித்து வியாபாரம் பேசுவார்கள்.

அதன்பின்பு சாட்டிலைட் டிவி உரிமைக்காகத் தயாரிப்பாளர்களுக்கு அட்வான்ஸ் தொகை கொடுக்கும் வழக்கம் வந்தது. அப்போது கடும் போட்டி நிலவியது. தியேட்டர் வருமானத்தை விடவும் சாட்டிலைட் டிவி உரிமை வருமானம் ஒரு நேரடி வருமானம். அது தற்போது குறைந்து அந்த இடத்தை ஓடிடி உரிமை பிடித்துக் கொண்டது.

சமீபத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தென்னிந்திய மொழிப் படங்களை வாங்குவதை நிறுத்தியதாக ஒரு தகவல் பரவியது. ஆனால், அந்நிறுவனம் மீண்டும் படங்களை வாங்க ஆரம்பித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு பூஜை போட்ட சூர்யாவின் 47வது பட ஓடிடி உரிமையை அந்த நிறுவனம்தான் வாங்கியிருக்கிறதாம். அதன் விலை 25 கோடி என்கிறார்கள். சூர்யாவின் சம்பளம் இல்லாமல் அந்த 25 கோடிதான் படத்தின் மொத்த தயாரிப்பு செலவாம். அது மட்டுமல்லாமல் ஆடியோ உரிமை, வெளிநாட்டு உரிமை ஆகியவற்றையும் விற்றுவிட்டார்களாம்.

தனது உரிமைக்கான பணத்தில் பாதியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அட்வான்ஸ ஆக தந்துவிட்டதாம். அதை வைத்து தற்போது படத்தை அமோகமாக ஆரம்பித்துள்ளார்கள். மற்ற உரிமைகளிலிருந்தும் அட்வான்ஸ் வந்தால் அவற்றை முதலீடாக வைத்தே படத்தை முடித்துவிடுவார்களாம்.

பல படங்கள் ஓடிடி உரிமைக்காகக் காத்திருக்கும் நிலையில் இந்தப் படத்திற்கான இப்போதைய வியாபார நிலைமை கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் கடந்த சில வருடங்களாக சூர்யாவின் தியேட்டர் வசூல் தோல்வி முகமாகவே உள்ளது. ஓடிடியில் நேரடியாக வெளியான 'சூரரைப் போற்று, ஜெய் பீம்' இரண்டும் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரு வேளை ஓடிடியில் சூர்யா படங்களுக்கு இருக்கும் வரவேற்பும் சூர்யா 47 வியாபாரத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !