உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : நிஜ பாம்புடன் துணிச்சலாக நடித்த ஜெயசித்ரா

பிளாஷ்பேக் : நிஜ பாம்புடன் துணிச்சலாக நடித்த ஜெயசித்ரா

'குறத்தி மகன்' படத்தில் அறிமுகம் ஆகி தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஜெயசித்ரா. அன்றைக்கு துணிச்சலான நடிகைகளாக ஜெயலலிதா, ஸ்ரீப்ரியா வரிசையில் இருந்தவர் ஜெயசித்ரா.

ஜெயசித்ராவின் துணிச்சலுக்கு மிகச்சிறந்த உதாரணம் அவர் நிஜ பாம்புடன் துணிச்சலாக நடித்தது. அவருக்கு முன்பு நடித்த நடிகைகள் பிளாஸ்டிக் பாம்பை பயன்படுத்தினார்கள் முதன் முதலாக நிஜப் பாம்புடன் நடித்தவர் ஜெயசித்ரா என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

'வெள்ளிக்கிழமை விரதம்' என்ற படத்தில் கதைப்படி ஜெயசித்ரா மயங்கிக் கிடக்கும் போது அவர் மீது ஒரு பாம்பு ஊர்ந்து செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த காட்சிக்கு பிளாஸ்டிக் பாம்பையே ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள். ஆனால் ஜெயசித்ரா இது பக்தி படம் இதில் மக்களை, பக்தர்களை ஏமாற்றக்கூடாது. அதனால் நிஜ பாம்பு கொண்டு வாருங்கள் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று சொன்னார்.

அதன் பிறகு நிஜ பாம்பு கொண்டு வரப்பட்டு அந்த காட்சியில் ஜெயசித்ரா நடித்தார். கதைப்படி அவர் மயக்கமாக இருக்க வேண்டும் என்பதால் எந்த அசைவும் இன்றி அவர் படுத்து கிடந்தார் அவர் காலில் இருந்து ஊர்ந்து வந்து அவர் மீது படுத்து பாம்பு அவரை உற்றுப் பார்ப்பது போன்று செய்து பின்னர் அவர் காதில் ஏதோ சொல்லிவிட்டு போவது மாதிரியான காட்சி. அது அப்படியே படமாக்கப்பட்டது.

படத்தில் இது முக்கியமான காட்சி என்பதாலும் திரும்ப எடுப்பது சிரமம் என்பதாலும் அந்த காலத்திலேயே மூன்று கேமராக்கள் கொண்டு இந்த காட்சி படமாக்கப்பட்டது. பாம்பு கடித்து விட்டால் அதற்கான சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தார்கள். இந்த காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும் சுற்றி நின்ற அனைவரும் கைதட்டி ஜெயசித்ராவை பாராட்டினார்கள்.

படம் வெளியான பிறகு இந்த காட்சி பரபரப்பாக பேசப்பட்டது பல தியேட்டர்களில் பெண்கள் சாமி வந்து ஆடிய நிகழ்வும் நடந்தது. படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !