விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன்
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் தம்பதியினர் குறித்து விவாகரத்து வதந்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகி வருகிறது. அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்தி வெளியிட்டு வருகிறார்கள். அது குறித்து தான் அளித்த ஒரு பேட்டியில் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் அபிஷேக் பச்சன்.
அவர் கூறுகையில், நானும், ஐஸ்வர்யாவும் காதலித்து வந்தபோது உங்களது திருமணம் எப்போது என்று ஊடகங்கள் எங்களிடத்தில் கேள்வி கேட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு இப்போது விவாகரத்து செய்து விட்டதாக கூறுகிறார்கள். இது முட்டாள்தனமானது. எனக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் இடையில் எந்தவித பிரச்சனை இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். இந்த விஷயத்திற்கு இத்தோடு ஊடகங்கள் முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள் என்று தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் அபிஷேக்பச்சன்.
மேலும், இது போன்ற வதந்திகள் குறித்து எங்கள் மகள் ஆரத்யாவுக்கு எதுவும் தெரியாது. தெரிந்தாலும் அதை கண்டுகொள்ளாத அளவுக்கு அவரை ஐஸ்வர்யா புத்திசாலியாக வளர்த்திருக்கிறார். மீடியாக்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப கூடாது என்று அவருக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளோம். அதனால் சமூக வலைதளங்களில் வெளியாகும் இதுபோன்ற வதந்திகளை அவர் ஒருபோதும் நம்ப மாட்டார்.
நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது இதுபோன்ற பொய்யான செய்திகளை மீடியாக்கள் திட்டமிட்டே பரப்பினால் அதைப்பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், கணவனும் , மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் போது இதுபோன்ற செய்தி வெளியிடுவது தவறான செயல். அதனால் இதை புரிந்து கொண்டு ஊடகங்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் அபிஷேக் பச்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.