உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : காணாமல் போன 'கண்ணின் மணிகள்'

பிளாஷ்பேக் : காணாமல் போன 'கண்ணின் மணிகள்'

சில நல்ல படங்களை காலப்போக்கில் மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால் 'கண்ணின் மணிகள்' என்ற அற்புதமான படமே காணாமல் போய்விட்டதுதான் பெரிய சோகம். டி.ஜானகிராமன் என்ற ஒளிப்பதிவாளர், தயாரித்து, இயக்கிய படம். எம்.கே.ராதா, பத்மினி, சுந்தர், என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்திருந்தார்.

ஒரு உயர்போலீஸ் அதிகாரியின் மகள் உடல்நலமில்லாமல் வீட்டில் படுத்த படுக்கையாக இருப்பார், அவருக்கு வீட்டில் வந்து சிகிச்சை அளிப்பார் ஒரு டாக்டர். அந்த டாக்டரின் அன்பும், அரவணைப்பும் போலீஸ் அதிகாரியின் மனைவிக்கு பிடித்துப்போகும். இதனால் அந்த டாக்டர் மீது கூடுதல் அன்பு செலுத்துவார். இதனை தவறாக புரிந்து கொள்கிறார்கள் போலீஸ் அதிகாரியும், அவரது மகளும். இந்த நேரத்தில் பார்வையற்ற ஏழை பெண் ஒருத்தி அந்த வீட்டிற்கு வருகிறாள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

இந்த படம் கதை, திரைக்கதை வடிவமைப்பிற்காக அப்போது பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக பார்வையற்ற பெண்ணாக நடித்த பத்மினியின் நடிப்பு பேசப்பட்டது. அன்றைய பத்திரிகைகள் படத்தை பாராட்டித் தள்ளியது. ஆனாலும் படம் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை. அந்த படத்தின் எந்த ஒரு பிரதியும் இப்போது இல்லை. அதன் பாடல்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. கருப்பு வெள்ளைப் படமான இதில் சில முக்கியமான காட்சிகளும், பாடல் காட்சிகளும் கேவா கலரில் படமாக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !