உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீதிமன்ற தீர்ப்பு எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை : நடிகை அறிக்கை

நீதிமன்ற தீர்ப்பு எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை : நடிகை அறிக்கை

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த பிரபல நடிகை ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டு பாலில் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது மலையாள முன்னணி நடிகர் திலீபின் திட்டப்படி நடத்தப்பட்டாக தெரியவந்தது. பின்னர் அவரையும் போலீசார் கைது செய்தனர். இரண்டு மாதங்களிலேயே ஜாமீனில் வெளியில் வந்தார்.

8 வருடமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 10 பேர் பட்டியலில் முதல் 6 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம், திலீப் உள்ளிட்ட மற்ற 4 பேரை விடுதலை செய்தது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்பில் விளக்கம் தரப்பட்டது.

இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை தீர்ப்பு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

8 ஆண்டுகள் 9 மாதங்கள், 23 நாள்களுக்குப் பிறகு, மிக நீண்ட மற்றும் வேதனையான பயணத்தின் முடிவில் நான் இறுதியாக ஒரு சிறிய ஒளிக்கீற்றைக் கண்டேன். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆறு பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதற்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இந்தத் தருணமானது, என் வலியை ஒரு பொய் என்றும், இவ்வழக்கை புனைகதை என்றும் கூறியவர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இன்று நீங்கள் உங்களைப் பற்றியே மன அமைதியுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மேலும், இதில் முதல் குற்றவாளி (பல்சர் சுனில்) எனது தனிப்பட்ட ஓட்டுநர் என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு அது முற்றிலும் பொய். அவர் என் ஓட்டுநர் அல்ல, என் ஊழியர் அல்ல, எனக்குத் தெரிந்தவரும் அல்ல. நான் பணியாற்றிய ஒரு திரைப்படத்துக்கு ஓட்டுநராக நியமிக்கப்பட்ட ஒரு சாதாரண நபர் அவர். அந்த நேரத்தில் நான் அவரை ஒன்றிரண்டு முறை மட்டுமே சந்தித்தேன்.

அதன்பிறகு, இந்தக் குற்றம் நடக்கும் நாள் வரை ஒருபோதும் அவரைச் சந்தித்ததில்லை. தயவுசெய்து தவறான கதைகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்.
இந்தத் தீர்ப்பு பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கலாம். ஆனால், அது என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை. 2020 தொடக்கத்திலேயே, ஏதோ சரியில்லை என்று நான் உணரத் தொடங்கினேன். அரசுத் தரப்பு கூட, வழக்கு கையாளப்பட்ட விதத்தில் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட குற்றவாளியின் விஷயத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்தது.

பல ஆண்டுகளாக, உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் பலமுறை அணுகி, இந்த நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று நான் தெளிவாகக் கூறினேன். வழக்கை அதே நீதிபதியிடமிருந்து மாற்றுவதற்கான ஒவ்வொரு கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. பல வருட வலி, கண்ணீர், உணர்ச்சிப் போராட்டங்களுக்குப் பிறகு, ஒரு வேதனையான உண்மையை நான் உணர்ந்துள்ளேன். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை.

மனிதர்களின் தீர்ப்புகள், இறுதியில் முடிவுகளை எவ்வளவு வலிமையாக வடிவமைக்க முடியும் என்பதை இந்தத் தீர்ப்பு எனக்கு உணர்த்தியது. ஒவ்வொரு நீதிமன்றமும் ஒரே மாதிரியாகச் செயல்படுவதில்லை என்பதையும் நான் அறிவேன். இந்த நீண்ட பயணத்தில் எனக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !