நாட்டாமை டீச்சர் மகள் புரமோஷனுக்கு வரவில்லை
பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் இந்த வாரம் வெளியாக உள்ள கொம்புசீவி படத்தில், நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த, ஓ போடு பாடலில் குத்தாட்டம் போட்ட ராணியின் மகள் தார்ணிகா ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை.
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பட விளம்பர நிகழ்ச்சிக்கும் அவர் வரவில்லை. அவர் வெளிநாட்டில் இருப்பதால் சென்னை வரவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்தனர். அதேசமயம், ஹீரோயின் சம்பந்தப்பட்ட பாடலையோ, போட்டோக்களையோ படக்குழுவும் விளம்பரபடுத்தவில்லை. அவர் கதைப்படி போலீஸ் ஆக வருகிறார் என்று கூறப்படுகிறது.
பொன்ராம் இயக்கிய ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு பெரிய வெற்றியை கொடுத்து, அவரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. ஆகவே, கொம்புசீவி படம் பார்த்துவிட்டு பொன்ராமுக்கு ஆதரவாக சில விஷயங்களை சிவகார்த்திகேயன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், சீமராஜா, டிஎஸ்பி படங்கள் ஓடாத நிலையில், ஒரு வெற்றிக்காக பொன்ராம் காத்திருக்கிறார்.