சிம்புவின் 51வது படத்தை தயாரிப்பதை உறுதிப்படுத்திய அர்ச்சனா கல்பாத்தி
அரசன் படத்தில் நடித்து வரும் சிம்பு அதையடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது ஐம்பதாவது படத்தில் நடிக்கப் போகிறார். அதைத்தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தனது 51வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் ஓமை கடவுளே படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த நிலையில் அவர் இயக்கும் அடுத்த படத்தையும் அதே நிறுவனம்தான் தயாரிக்கிறது.
அது குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறுகையில், ‛‛எஸ்டிஆர் 51- வது படம் ரொமான்டிக் காதல் கதையில் உருவாகிறது. இந்த படத்திற்கு நான்கு அதிரடியான பாடல்களை வைத்திருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து'' என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சிம்புவின் 51வது படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பது உறுதியாகி இருக்கிறது. அதோடு பேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் சிம்பு நெகட்டிவ் கலந்த ரோலில் நடிப்பதாகவும் ஏற்கனவே அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.