கூட்ட நெரிசலில் சிக்கிய நிதி அகர்வால் : போலீஸ் வழக்கு பதிவு
மாருதி இயக்கத்தில், பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் பான் இந்தியா படமான 'தி ராஜா சாப்' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'சஹானா சஹானா' பாடல் இரண்டு தினங்களுக்கு முன்பு ஐதரபாத்தில் உள்ள லூலு மாலில் நடைபெற்றது. படத்தின் நாயகிகளில் ஒருவரான நிதி அகர்வால் நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில் அங்கு கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தார். அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தனர்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. படக்குழுவினர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முறையான பாதுகாப்பை அளிக்கத் தவறியது குறித்து சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், குகட்பள்ளி ஹவுசிங் போர்டு போலீஸ் இது குறித்து தாமாகவே (Suo Motu) புகார் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளது. லூலு மாலின் நிர்வாகம், நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்த ஈவன்ட் நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. தங்களிடம் முறையான அனுமதியைப் பெறவில்லை என அந்தக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.