பிளாஷ்பேக்: அரியலூர் ரயில் விபத்து பின்னணியில் உருவான படம்
1956ம் ஆண்டு அரியலூர் மருதை ஆற்றுப் பாலத்தில் மலைக்கோட்டை ரயில் கவிழ்ந்து விழுந்ததில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் கொல்லப்பட்டனர். அதுவரை சுதந்திர இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும். 'விடுதலை' படம் இந்த ரயில் விபத்து காட்சிகளில் இருந்துதான் தொடங்கும்.
ஆனால் இந்த விபத்து பின்னணியிலேயே உருவான படம் 'மாதர் குல மாணிக்கம்'. இது ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 'நுகடுடபி' என்ற நாவலை தழுவி உருவானது. ஒரு பெரிய விபத்தை சந்தித்த குடும்பத்தை சுற்றி நடக்கும் கதை.
தாகூரின் நாவலில் படகு விபத்து பின்னணி இருந்தது. தமிழ்நாட்டில் பயணிகள் படகு போக்குவரத்து இல்லாததால் அதை ரயில் விபத்தாக மாற்றி இந்த படத்தில் காட்சிகளை அமைத்திருந்தார் இயக்குனர் டி.பிரகாஷ்ராவ். இதற்காக ரயில் விபத்து நடந்த இடத்திற்கு சென்று அங்குள்ள காட்சிகளை படம் பிடித்து அதனை தனது படத்தில் காட்சியாக வைத்தார்.
இந்த படத்தில் ஜெமினி கணேசன், நாகேஸ்வரராவ், எஸ்.வி.ரங்காராவ், அஞ்சலி தேவி, சாவித்ரி, பி.கண்ணாம்மா, எம்.என்.ராஜம், கே.ஆர்.செல்லம், எஸ்.டி.சுப்புலட்சுமி உள்பட பலர் நடித்திருந்தார்கள். சரண தாசி என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியானது. இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றது.