ஒரே நிறுவனத்திற்கு முதல் படத்தையும், கடைசி படத்தையும் இயக்கிய ஏ.சி.திருலோகச்சந்தர்
ADDED : 6 days ago
கருப்பு, வெள்ளை சினிமா காலத்தில் முன்னணி இயக்குனராக இருந்தவர் ஏ.சி.திருலோகச்சந்தர். குமாரி, விஜயபுரி வீரன், பார்த்தால் பசி தீரும் படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் ஏவிஎம் தயாரித்த 'வீரத்திருமகன்' படத்தின் மூலம் இயக்குனரானார். இந்த படத்தில் சி.எல்.ஆனந்தன், ஈ.வி சரோஜா நடித்தனர். 1962ம் ஆண்டு வெளிவந்தது.
அவரது கடைசி படம் 'அன்புள்ள அப்பா' 1987ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தையும் ஏவிஎம் நிறுவனமே தயாரித்தது. இதில் சிவாஜி, நதியா, ரகுமான், நடித்தனர். இடையில் ஏவிஎம் நிறுவனத்தின் கீழ் பல படங்களை இயக்கி உள்ளார்.
கடைசியாக அப்பா, மகள் பாசத்தை அடிப்படையாக கொண்டு ஒரு படத்தை இயக்கி விட்டு சினிமாவை விட்டு விலக விரும்புவதாக அவர் அறிவித்தபோது, அந்த படத்தை நாங்களே தயாரிக்கிறோம் என்று ஏவிஎம் நிறுவனம் முன்வந்து தயாரித்ததாக கூறுவார்கள்.