அதனால்தான் மம்முட்டி வித்தியாசமானவர் : துருவ் விக்ரம் பாராட்டு
மலையாளத்தில் சில நாட்களுக்கு முன்பு மம்முட்டி நடித்த களம் காவல் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பல அபலை பெண்களை ஆசை வார்த்தை காட்டி அவர்களைப் பயன்படுத்திக் கொண்ட பிறகு கொலை செய்யும் ஒரு சைக்கோ கில்லர் கதாபாத்திரத்தில் மம்முட்டி மிக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதுமட்டுமல்ல, இதுநாள் வரை வில்லனாக பார்த்து வந்த நடிகர் விநாயகன் இந்த படத்தில் இந்த கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வில்லன், ஹீரோ இருவருமே தங்களது கதாபாத்திரங்களை மாற்றி மாற்றி நடித்துள்ளதால் இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
குறிப்பாக இங்கே தமிழ் திரை உலகத்தை சேர்ந்த பிரபலங்கள் பலரும் களம் காவல் படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் துருவ் விக்ரம் களம் காவல் படம் பார்த்துவிட்டு, “மொத்த படத்தையும் நடிகர் மம்முட்டி தனது தோள்களில் தாங்கியுள்ளார். பல கதாநாயகர்கள் இப்படி ஒரு கதாபாத்திரத்தை செய்வதற்கு நிச்சயமாக தயங்குவார்கள். ஆனால் இது போன்ற ஒரு ரிஸ்க்கான கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு துணிச்சலாக நடித்திருப்பதால் தான் அவர் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்” என்று பாராட்டியுள்ளார்.