தாத்தாவாக நடிக்க மாட்டேன், அப்பாவுடன் நடிக்க ஆசை : விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு நடிக்கும் 25வது படம் சிறை. டிசம்பர் 25ம் தேதி திரைக்கு வருகிறது. படம் குறித்து விக்ரம் பிரபு கூறியது, ‛‛கும்கியில் ஆரம்பித்த என் பயணம் 25 படம் வரை வெற்றிகரமாக வந்துள்ளது மகிழ்ச்சி. இத்தனை படங்கள் எடுத்தாலும் நான் சம்பள விஷயத்தில் கறராக இருப்பதில்லை, முரண்டு பிடிப்பதில்லை. சினிமாவை நான் ஆர்ட்டாக நினைக்கிறேன். அதனால் நல்ல படம், கதை, பட குழு என்பதில் கவனம் செலுத்துகிறேன்.
தாத்தா சிவாஜி கணேசன் கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி.,ஆக நடித்திருக்கிறார். இனி அப்படிப்பட்ட படங்களை எடுக்க முடியுமா என தெரியவில்லை. காரணம் அதற்கு தனி உழைப்பு தேவைப்படும். அதேபோல் நானும் தாத்தா சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு படத்தில் அவராக நடிக்க மாட்டேன். காரணம் உலகத்தில் ஒரே ஒரு சிவாஜி தான். அவரைப் போல் யாரும் நடிக்க முடியாது.
என் மச்சான் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அஜித் படம் பண்ணுகிறார், அது சந்தோசம். அந்த படத்தில் அவர் நடிக்க அழைத்தால் எதுவும் பேசாமல் கவுரவ வேடத்தில் கூட நடிப்பேன். அப்பா பிரபுவுடன் மீண்டும் நடிக்க கதைகள் கேட்கிறேன். பொன்னியின் செல்வன் படத்தில் அவருடன் இணைந்து நடித்தது பெரு மகிழ்ச்சி'' என்றார்.