போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுவிப்பு
மலையாள திரையுலகில் பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த பல வருடங்களுக்கு முன்பே இவர் படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு போலீஸில் கைதாகி பின்னர் விடுதலை ஆனவர். ஆனாலும் இவரை சுற்றி போதைப்பொருள் சர்ச்சை சுழன்று கொண்டே இருந்தது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் சோதனையின் போது பிடிபட்ட பெண் ஒருவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு தாங்கள் ரெகுலராக போதைப்பொருள் சப்ளை செய்வதாக கூறினார்.
இன்னொரு பக்கம் மலையாள நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் சாக்கோ உடன் ஒரு படத்தில் இணைந்து நடித்தபோது அவர் போதை பயன்படுத்தி தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்ள முயற்சித்தார் என்றும் புகார் அளித்தார். இதனையடுத்து பதியப்பட்ட வழக்கில் அந்த சமயத்தில் தன்னை விசாரிக்க வந்த போலீசாரிடம் தப்பிப்பதற்காக ஹோட்டல் அறையில் இருந்து குதித்து ஷைன் டாம் சாக்கோ தப்பி சென்றது பரபரப்பாக செய்திகளில் அடிபட்டது. அதன்பிறகு தலைமறைவான அவர் மீண்டும் போலீசில் ஆஜராகி தனது விளக்கத்தை அளித்தார். இதனை தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் ஷைன் டாம் சாக்கோவிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பாரன்சிக் தடயங்களில் இருந்து அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.. இதனைத் தொடர்ந்து இந்த போதைப்பொருள் வழக்கிலிருந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.