மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர்
விஜயின் 'ஜனநாயகன்' பட பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் மிகப்பிரமாண்டமாக நடந்துள்ளது. இந்தளவுக்கு கூட்டம் கூடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு லட்சம்பேர் வரை கலந்துகொண்டனர். விழா நடந்த ஸ்டேடியத்தில் மட்டுமே 80 ஆயிரம் பேர் அமரலாம். வெளியே நின்றவர்கள், விஜயை பார்க்க கூடியவர்கள் என மலேசியாவே 'ஜனநாயகன்' திருவிழாவாக மாறியது.
இந்நிலையில், அதற்கு போட்டியாக பாடல் வெளியீட்டுவிழா, படத்தை விளம்பரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் பராசக்தி படக்குழுவினர். இரண்டு படங்களும் பொங்கலுக்கு மோதுவதால் பராசக்தியையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஜனநாயகனுக்கு போட்டியாக வெற்றி பெற வைக்க வேண்டும் என்று படக்குழுவினர் நினைக்கிறார்களாம். தெலுங்கில் ஹிட்டான 'பகவந்த் கேசரி'யை தழுவி ஜனநாயகன் படம் எடுக்கப்படுகிறது என்கிறார்கள்.
இந்தி எதிர்ப்பு போராட்டம், மாணவர் எழுச்சி சம்பந்தப்பட்ட கதை 'பராசக்தி'. இரண்டு படங்களுமே பக்கா ஆடல், பாடல், பைட், காமெடி நிறைந்த கமர்ஷியல் லைனில் எடுக்கப்படவில்லை. ஆகவே, இருவரும் தியேட்டருக்கு மக்களை வர வழைக்க வேண்டும், பல கோடி லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று கணக்கு போடுகிறார்கள். ஒருவரை மற்றவர் மிஞ்ச வேண்டும் என்ற மறைமுக போட்டியும் நடக்கிறது. ஆகவே, ஜனவரி 3ம் தேதி சென்னையில் நடக்க உள்ள பராசக்தி பாடல் வெளியீட்டு விழாவில் கூடுதலாக சில விஷயங்களை சேர்க்க முயற்சிகள் நடக்கிறதாம். சென்னை தவிர மற்ற பகுதிகளுக்கும் பராசக்தி படக்குழு சென்று படம் குறித்து பேச வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.