'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா
மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் ஜெயசூர்யா, கடந்த 2023 சுவாதிக் ரஹீம் என்பவர் துவங்கிய 'சேவ் பாக்ஸ்' என்கிற நிறுவனத்திற்கு விளம்பர தூதராக ஒப்பந்தமானார். இந்த நிறுவனம் தனியாக செயலி ஒன்றையும் துவங்கி அதன் மூலம் மிகக்குறைந்த விலையில் எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்வதாக அறிவித்தது. அதுமட்டுமல்ல அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி முதலீட்டாளர்களையும் அழைத்து கோடிக்கணக்கில் பணத்தையும் முதலீடாக பெற்றனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு சொன்னபடி வட்டியையும் அசலையும் திருப்பிக் கொடுக்க தவறினார்கள். இதனைத் தொடர்ந்து சுவாதிக் ரஹீம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இது குறித்த அமலாக்க துறையின் விசாரணைக்கு நடிகர் ஜெயசூர்யா அழைக்கப்பட்டு இன்று நடைபெற்ற விசாரணையில் அவர் கலந்து கொண்டார். உடன் அவரது மனைவி சரிதாவும் வந்திருந்தார். இந்த நிறுவனம் தொடர்பாக ஜெயசூர்யாவுடன் நடைபெற்ற பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அமலாக்கத்துறை ஜெயசூர்யாவிற்கு சம்மன் அனுப்பியதாகவும் அதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக இன்றைய விசாரணையில் ஜெயசூர்யா கலந்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.