அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது!
2015ம் ஆண்டில் அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் 'டிமான்டி காலனி'. ஹாரர் கதையில் உருவான அந்த படம் 2 கோடி பட்ஜெட்டில் உருவாகி 17 கோடி வசூலித்தது. அதன் பிறகு 'இமைக்கா நொடிகள், கோப்ரா' போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, 2024ம் ஆண்டு டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஜோடி சேர்ந்து நடித்த அந்த படம் 20 கோடியில் தயாரிக்கப்பட்டு 75 கோடி வசூலித்தது.
அதையடுத்து தற்போது டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்கி உள்ளார் அஜய் ஞானமுத்து. இந்த படத்திலும் இரண்டாம் பாகத்தில் நடித்த அருள்நிதி, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ளார்கள். இந்நிலையில் புத்தாண்டையொட்டி இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், தலையில் கிரீடம், கையில் வாள் வைத்தபடி ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அருள்நிதி, வில்லன் தோரணையில் போஸ் கொடுக்கிறார். வரும் கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகிறது.