ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு : மேல்முறையீடு செய்கிறது தணிக்கை வாரியம்
விஜயின் ஜனநாயகன் படம் சென்சார் பிரச்னையில் சிக்கி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு உடனடியாக சென்சார் சான்று அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்கிறது.
விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள படம் 'ஜனநாயகன்'. விஜயின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட இப்படம் இன்று(ஜன., 9) ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்று வழங்காததால் படம் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழங்கு தொடர்ந்தது.
தணிக்கை குழுவினர் இந்த படத்திற்கு யு/ஏ சான்று வழங்க முடிவெடுத்துள்ளனர். ஆனால் தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஒரு படத்தை தணிக்கை செய்ய 15 நாட்கள் தேவைப்படும். எனவே, ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க 4 வாரம் அவகாசம் தேவை. இந்த விஷயத்தில் எங்களுக்கு தீயநோக்கம் எதுவுமில்லை என தணிக்கை வாரியம் நீதிமன்றத்தில் வாதிட்டது.
பெரும்பான்மை உறுப்பினர்கள் யு/ஏ சான்று வழங்க பரிந்துரைத்தனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறுஆய்வுக்கு அனுப்ப வேண்டும். அதிக உறுப்பினர்களின் முடிவை எப்படி செல்லாது என சொல்ல முடியும்? என தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இன்று(ஜன., 9) தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது.
அதன்படி இந்த வழக்கு மீதான தீர்ப்பை இன்று நீதிபதி பிடி ஆஷா வாசித்தார். ஜனநாயகன் திரைப்படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பியது தவறானது. உடனடியாக அந்த படத்திற்கு சென்சார் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட் உத்தரவையடுத்து ஜனநாயகன் படம் ஏற்கனவே வழங்கப்பட்ட யு/ஏ சான்றுடன் வெளியாக இருக்கிறது.
தணிக்கை வாரியம் மேல்முறையீடு
இதனிடையே தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது. இதை அவசர வழக்காக எடுக்க வேண்டும் என தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. இதை மனுவாக தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்த வழக்கு இன்று மதியம் எடுக்கப்படலாம் அல்லது திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளதால் ஜனநாயகன் வெளியீட்டில் மீண்டும் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.