பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு
இந்தியத் திரையுலகத்தின் முக்கியமான பின்னணி பாடகிகளில் ஒருவர் எஸ் ஜானகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
அவர் 1959ம் ஆண்டு ராம்பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரு மகன் இருக்கிறார். 1997ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக ராம்பிரசாத் மரணம் அடைந்தார்.
தற்போது ஐதராபாத்தில் ஜானகியும், அவரது மகன் முரளி கிருஷ்ணாவும் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் 65 வயதான முரளி கிருஷ்ணா மரணமடைந்துள்ளார்.
தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் முரளி கிருஷ்ணா நடித்துள்ளார். மறைந்த முரளிகிருஷ்ணாவுக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.
முரளிகிருஷ்ணாவின் மறைவு குறித்து பின்னணிப் பாடகி சித்ரா அவரது பேஸ்புக்கில், “இன்று காலை முரளி அண்ணா (நமது அன்புக்குரிய ஜானகி அம்மாவின் ஒரே மகன்) திடீர் மரணம் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அன்பான சகோதரனை இழந்தேன். அம்மாவுக்கு இந்த தாங்க முடியாத வலி மற்றும் துயரத்தை சமாளிக்க இறைவன் வலிமை அருளட்டும். பிரிந்த ஆத்மா நித்திய உலகில் அமைதியுடன் ஓய்வெடுக்கட்டும். ஓம் சாந்தி,” என்று பதிவிட்டுள்ளார்.