காணாமல் போகிறதா 'ஹவுஸ்புல்' காட்சிகள் ?
தமிழ் சினிமா உலகம் கடந்த வருடம் ஒரு கடுமையான சோதனையை சந்தித்தது. எதிர்பார்க்கப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் அதிக லாபத்தைக் கொடுக்கவில்லை. சில நடிகர்களின் படங்கள் ஓடாமல் போய் நஷ்டத்தைத்தான் கொடுத்தன. சிறிய படங்கள் சில மட்டுமே ஓடி தியேட்டர்களைக் காப்பாற்றியது. அது இந்த வருடமும் தொடருமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.
முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. அந்தப் படத்திற்கு மட்டும் வெளியான வார இறுதி வரையில், தியேட்டர்களில் பல காட்சிகள் 'ஹவுஸ்புல்' ஆக அமைந்தன. வார நாள் ஆரம்பமானதும் அதுவும் குறைந்து போனது. அதன் பிறகு வெளிவந்த சிவகார்த்திகேயனின் 'மதராஸி', தனுஷின் 'இட்லி கடை' ஆகிய படங்கள் முதல் நாளில் மட்டும் சில காட்சிகள் ஹவுஸ்புல் ஆக இருந்தன. அதற்கடுத்து வந்த படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' படத்திற்கும் ஓரிரு காட்சிகள் மட்டும் ஹவுஸ்புல் ஆக அமைந்தன.
ஒரு சில நாட்களாவது ஹவுஸ்புல் என்பது 'கூலி' படத்துடன் முடிந்து போனது. கடந்த ஆறு மாதங்களாக தியேட்டர்களில் ஹவுஸ்புல் என்பது வார இறுதி நாட்களில் கூட இல்லாமல் இருக்கிறது. பொங்கலுக்கு வெளிவந்த படங்களாலும் அது நடக்கவில்லை.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் வந்தால் மட்டுமே மீண்டும் அப்படியான வார இறுதி வரையிலாவது ஹவுஸ்புல் காட்சிகள் வரும். ஆனால், அந்தப் படமும் எப்போது வரும் என்பது தெரியாமல் இருக்கிறது. இதற்கடுத்து ஏப்ரல் அல்லது மே மாதத்தில்தான் முன்னணி நடிகர்களின் படங்கள் வர உள்ளது. அதுவரையில் சிறிய படங்களை மட்டுமே நம்பி தியேட்டர்களை ஓட்ட முடியாது என தியேட்டர்காரர்கள் கவலை கொள்கிறார்கள்.
சிங்கள் தியேட்டர்கள் பலவும் வரும் நாட்களில் சில நாட்களோ அல்லது சில காட்சிகளே நடத்த முடியாமல் தற்காலிகமாக காட்சிகளை ரத்து செய்யும் நிலை வரலாம் என்கிறார்கள். 12 மற்றும் 10ம் ஆண்டு வகுப்புகளுக்கான முழுஆண்டுத் தேர்வு ஜுரம் இப்போதே ஆரம்பமாகிவிட்டது. அதனால், குடும்பத்துடன் வரும் சினிமா ரசிகர்கள் குறைவார்கள் என்பதே அதற்குக் காரணம்.
மேலும், உலகக் கோப்பை கிரிக்கெட் டி 20 போட்டிகளும் நாளை மறுநாள் பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரையில் ஒரு மாத காலத்திற்கு நடைபெற உள்ளது. அதன்பிறகு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரும் நடைபெறும். இதனால், கிரிக்கெட் ரசிகர்களும் தியேட்டர்கள் பக்கம் வருவது குறைந்துவிடும்.