தமிழக அரசுக்கு சற்று தாமதமாக நன்றி சொன்ன நயன்தாரா, விக்னேஷ் சிவன்
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரித்த படங்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு நன்றி தெரிவித்து பலர் அறிக்கைவிட்ட நிலையில், கொஞ்சம் லேட்டாக விக்னேஷ், நயன்தாரா நன்றி தெரிவித்து அறிக்கை விட்டுள்ளனர். அவர்கள் விடுத்த அறிக்கையில்...
எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதுகள் வழங்கி கவுரவித்த தமிழக முதல்வர், தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற கூழாங்கல் திரைப்படம் கடந்த 2020ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றது. அதே ஆண்டில் இந்த திரைப்படத்தில் நடித்த செல்லபாண்டி. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்றார். படத்தின் வலுவான உணர்வுகளையும், எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாமலும் இந்தக் கதையை படமாக்கிய இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் அவர்களுக்கு ரௌடி பிக்சர்ஸ் பாராட்டுகள் தெரிவிக்கிறது.
2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நெற்றிக்கண்'. பெண்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்தத் திரைப்படம் சமூகத்திற்கு வலுவான கருத்துகளை எடுத்துரைத்ததற்காக சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய அதன் வலுவான கருத்தை திரையில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இயக்கிய மிலிந்த் ராவிற்கு ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் நன்றி தெரிவிக்கிறது.
அதேபோல், சமூக நெறிமுறை கருத்துகளை வலியுறுத்திய 'அறம்' திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை நயன்தாராவிற்கு 2017ம் ஆண்டிற்கான சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டிருப்பதும் பெருமையான விஷயம். இயக்குநர் கோபி நயினார், தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே. ராஜேஷ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் ரவுடி பிக்சர்ஸ் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இந்த படங்கள் அனைத்தும் உருவாக காரணமான இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ் அனைவரின் அர்ப்பணிப்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கிறது.
சமூக பொறுப்புணர்வோடு கூடிய படங்களை தொடர்ந்து தயாரிக்கவும், புதிய திறமையாளர்களுக்கான தளமாகவும் தொடர்ந்து இயங்க, இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது என்பதை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மகிழ்வுடன் தெரிவிக்கிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.