2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல்
திரையுலகத்தைப் பொறுத்தவரை புதிய படங்களின் வசூலில் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் தவறான கணக்குக் காட்டுவார்கள் என்று சொல்வார்கள். நன்றாக வசூல் ஆனாலும், வசூலிலில்லை என்று சொல்வது வழக்கம் என பல காலமாக பேச்சு இருக்கிறது. அது இப்போதும் கூட தொடர்வதாக கோலிவுட்டில் பலரும் சொல்லக் கேட்கலாம்.
1992ம் ஆண்டில் ஆர்கே செல்வமணி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பிரஷாந்த், ரோஜா, பானுமதி, மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'செம்பருத்தி'. அந்தப் படத்தின் வசூலில் ஒரு வினியோகஸ்தர் என்ன பொய் சொன்னார் என்பதை நேற்று நடைபெற்ற 'உயிருள்ளவரை உஷா' படத்தின் ரீ ரிலீஸ் நிகழ்வில் ஆர்கே செல்வமணி கூறினார்.
“நான் இயக்குனராக இருந்து தயாரிப்பாளராக மாறி 'செம்பருத்தி' படத்தைத் தயாரிக்கிறேன். இந்த திரையுலகம் எப்படி என்றால், ஒருவர் மாட்டினால் அவரைக் காலி செய்துவிடும். நான் அந்தப் படத்தை சிட்டி, என்எஸ்சி, டிடி ஆகிய ஏரியாக்களுக்கு ஐடி பாலகிருஷ்ணன் என்பவரிடம் 40 லட்ச ரூபாய்க்கு எம்ஜி போட்டு டிஸ்டிரிபியூஷன் கொடுத்தேன்.
40 லட்சத்தில் பப்ளிசிட்டி 4 லட்சம் போக திரும்ப 36 லட்சம் தொகை எனக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், படம் வசூல் செய்யவில்லை, 6 லட்சம் திருப்பித் தர வேண்டும் என்று கேட்டார். அடுத்த படம் செய்வதற்கு எனக்கு 'ரெட்' என்ற செக் வைத்திருந்தார்கள். அது குறித்த பஞ்சாயத்து வினியோகஸ்தர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது அங்கு வேறு வேலைக்காக வந்திருந்த டி ராஜேந்தர் எனக்காகப் பேசினார்.
என்ன பிரச்னை என்று கேட்டவரிடம், பிரச்னையைச் சொன்னேன். உடனே டி ராஜேந்தர், “ஒரு கலைஞனை ஏமாற்றாதீர்கள், உருப்பட மாட்டீர்கள் என்றார். மேலும், 'எங்க வீட்டு வேலன்' படமும் 'செம்பருத்தி' படமும் ஒரே நாளில் வெளியானது. ஒரு தியேட்டர்ல என்னோட 'எங்க வீட்டு வேலன்' படம் இரண்டு லட்சம் முதல் இரண்டரை லட்சம் வரை வசூல் செய்தது. 'செம்பருத்தி' சில இடங்களில் இதை விட அதிகமாவும், சில இடங்களில் குறைவாகவும் வசூல் செய்திருக்கும்.
'எங்க வீட்டு வேலன்' படம் சிட்டி, செங்கல்பட்டு, டிடி ஏரியாக்களில் இரண்டே கால் கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. 'செம்பருத்தி' படம் இரண்டு கோடி அல்லது இரண்டரை கோடி வசூல் செய்திருக்கும். இவரை ஏமாற்றினால், வாழ்க்கையில் உருப்பட மாட்டீர்கள், என்று சொன்னார்.
அப்போது வினியோக சங்கத் தலைவராக இருந்த சிந்தாமணி முருகேசனிடம் இந்த பிரச்சனையிலிருந்து விடுவியுங்கள் என்று கேட்டேன். கடைசியில் படம் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்று முடித்து வைத்தார்கள்.
ஆனால், அதன் பின் இரண்டு வருடங்களில் அந்த வினியோகஸ்தர் இறந்துவிட்டார். அந்த பாலகிருஷ்ணன் என்எஸ்சி ஏரியாவின் மிகப் பெரிய டிஸ்ட்ரிபியூட்டர். எனது 'புலன் விசாரணை' படத்தை வினியோகித்தவர் அவர்தான். என் மீது தவறு இல்லை நியாயம் இருக்கிறது என்று தெரிந்ததும் எனக்காகக் குரல் கொடுத்தவர் டி ராஜேந்தர்,” என்று பேசினார்.
2 கோடி வசூலுக்கு 30 லட்சம் மட்டுமே கணக்கு சொன்னது அந்தக் காலத்தில் நடந்திருக்கிறது. ஆனால், அதையும் பஞ்சாயத்து பேசி முடித்து வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சிகரமான உண்மை.