கோடிகளில் சம்பளம்... ஆனாலும் மகிழ்ச்சி இல்லை : அனிருத்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். தெலுங்கு, ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இவர் ஒரு பேட்டியில், 500 ரூபாய் சம்பளத்தில் இருந்த மகிழ்ச்சி கோடிகளில் வாங்கும் போது இல்லை என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, ‛‛சிறுவயதில் திருமண நிகழ்ச்சி மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது எனக்கு சம்பளமாக ரூ.500 கொடுப்பார்கள். சமயங்களில் வெறும் வெற்றிலை, பாக்கு மட்டும் கொடுப்பார்கள். அப்போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி கிடைத்தது.
இப்போது பல முன்னணி படங்களுக்கு இசை அமைக்கிறேன். கோடிகளில் சம்பளம் பெறுகிறேன். ஆனால் சிறு வயதில் கிடைத்த மகிழ்ச்சி இப்போது இல்லை என்று தான் சொல்வேன். இளம் வயதில் கிடைத்த மகிழ்ச்சியான நாட்களை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது'' என தெரிவித்துள்ளார்.