உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பணம் அல்லது சிறை ; கோச்சடையான் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பணம் அல்லது சிறை ; கோச்சடையான் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு


கடந்த 2014ல் ரஜினிகாந்த் நடிப்பில் மோஷன் கேப்சரிங் முறையில் அனிமேஷன் படமாக 'கோச்சடையான்' படம் வெளியானது. இந்த படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கியிருந்தார். இந்த விளம்பரம் மற்றும் தொழில்நுட்ப பணிகளுக்காக பட தயாரிப்பு நிறுவனம் ஒரு விளம்பர நிறுவனத்திடம் மிகப்பெரிய தொகை ஒன்றை கடனாக பெற்றது. ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பிக் கொடுக்கும்போது காசோலை பணமில்லாமல் திரும்பியது.

இதனை தொடர்ந்து 2021ல் கொடுக்கப்பட்ட வழக்கில் மெட்ரோ பாலிடன் நீதிமன்றம் தயாரிப்பாளருக்கு உரிய பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு திருப்பி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. 2023ல் சிட்டி சிவில் நீதிமன்றமும் அந்த தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால் குறிப்பிட்ட நாட்களில் அந்த பணம் திருப்பி தரப்படவில்லை. தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் அளித்த பெட்டிஷன் பேரில் தற்போது இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள 2.5 கோடி ரூபாயை நான்கு வாரங்களுக்குள் கோச்சடையான் தயாரிப்பாளர் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தர வேண்டும் என்றும் அப்படி தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது. இதில் தண்டனை என்பதில் முக்கியத்துவம் காட்டுவதை விட பாதிக்கப்பட்டவருக்கு நியாயமான தொகை சென்று சேர வேண்டும் என்பதில் தான் இந்த நீதிமன்றம் கவனம் செலுத்தி இருக்கிறது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !