துல்கர்-கல்யாணி வசனம் மூலம் ஹெல்மெட் விழிப்புணர்வு ; கேரள போலீஸ் பலே ஐடியா
ஆந்திரா, மும்பை, கேரளா ஆகிய மாநிலங்களில் வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வருகின்றனர் அம்மாநில போக்குவரத்து போலீஸார். குறிப்பாக அவர்களது மொழியில் வெளியாகும் திரைப்படங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஹெல்மெட் தொடர்பான காட்சிகள் வசனங்கள் இருந்தால் அவற்றை சோசியல் மீடியாவில் பயன்படுத்தி வாகன ஓட்டிகளிடம் நூதன பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் கேரள போலீசார் துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான 'வரனே ஆவஷ்யமுண்டு' என்கிற படத்தில் இருந்து ஒரு காட்சியை ஹெல்மெட் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தி உள்ளனர். இந்த படத்தில் கல்யாணி இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவதையே வெறுப்பவர். ஆனால் துல்கர் சல்மான் ஹெல்மெட் அணிவதை தவறாமல் பின்பற்றுபவர்.
அவர் கல்யாணியிடம் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கூறுகிறார். இந்த வீடியோ கிளிப்பை தான் விழிப்புணர்வு பிரசாரமாக கேரள போக்குவரத்து போலீசார் பயன்படுத்தியுள்ளனர். இது துல்கர் சல்மானின் கண்களிலும் பட்டு அவரும் ஹெல்மெட் முக்கியம் என்று தனது கமெண்டை பதிவு செய்துள்ளார்.