பேரன், பேத்திக்கு ஆன்மிக பெயர் சூட்டி மகிழ்ந்த சிரஞ்சீவி
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் மற்றும் உபாசனா, தம்பதிகளுக்கு கடந்த ஜனவரி 31 அன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இந்த தம்பதிகளுக்கு ஏற்கெனவே கிளிம் காரா என்ற மகள் உள்ளார்.
தற்போது இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடந்தது. இதில் பேரனுக்கு சிவராம் என்றும், பேத்திக்கு அன்வீரா தேவி என்றும் சிரஞ்சீவி பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர்களுக்கு அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் “எல்லையற்ற மகிழ்ச்சியுடனும், தெய்வீக அருளுடனும் எங்கள் இரண்டு சிறிய ஆசீர்வாதங்களின் அழகான பெயர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி. சிவராம் என்பது இரண்டு நிரந்தரமான லட்சியங்களின் ஆழமான சங்கமம். 'சிவ' என்பது சிவ சங்கர வர பிரசாத் அவர்களிடமிருந்து உதித்த, உள்ளார்ந்த வலிமை, ஆன்மிக ஆழம் மற்றும் அமைதியை பிரதிபலிக்கிறது. 'ராம்' என்பது ராம் சரணிடமிருந்து வந்தது.
'அன்வீரா தேவி' தெய்வீக பெண்மையை பிரதிபலிக்கும். அபூர்வமும் வலிமையும் கொண்ட வெளிப்பாடு. அன்வீரா என்பது அஞ்சாமை, திடத்தன்மை மற்றும் தெய்வீக பாதுகாப்பைக் குறிக்கிறது. கனக துர்கா தேவியின் அருளால் உதித்த பெயர். அருள், துணிச்சல் மற்றும் நிலையான வலிமையை பிரதிபலிக்கும் பெயர்” என்று குறிப்பிட்டுள்ளார்.