'வாரணாசி' படப்பிடிப்பை ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி!
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் லட்சியப் படமான 'வாரணாசி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ராஜமவுலி அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிவடைந்துவிட்டது என்றும், இந்த படத்தின் ராமாயண அத்தியாயம் உட்பட 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 50 சதவீத படப்பிடிப்பை வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறியிருக்கிறார்.
அதோடு படப்பிடிப்பு முடிந்ததும் இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்படுகிறது. முக்கியமாக விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் நடைபெற உள்ளது என்று கூறியுள்ள ராஜமவுலி, இந்த படம் 'ஆர்ஆர்ஆர்' படத்தை போன்று 'நாட்டு நாட்டு' என உற்சாகமான பாடல்களை கொண்டிருக்காது. இந்த வாரணாசி வேறு மாதிரியான படம் என்றும் தெரிவித்திருக்கும் அவர், மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் ஆகியோர் நடிக்கும் இந்த படம் 3 மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.