என் சினிமா வாழ்க்கையே முடிந்தது என நினைத்தேன் ; அக்ஷய் குமார் வெளியிட்ட அதிர்ச்சி தருணம்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தொடர்ந்து வருடத்திற்கு மூன்று நான்கு படங்களை கொடுத்தாலும் மீண்டும் ஒரு ஹிட் படத்தை கொடுக்க போராடி வருகிறார். இன்னொரு பக்கம் படங்களைத் தாண்டி வீல் ஆப் பார்ச்சூன் என்கிற ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார் அக்ஷய் குமார். இந்த நிலையில் சமீபத்திய இதன் எபிசோடு ஒன்றில் அவரிடம் உங்களை ரொம்பவே நிலைகுலைய வைத்த தருணம் எது என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அக்ஷய் குமார் பேசும்போது, “பல வருடங்களுக்கு முன்பு எனது நண்பனுடன் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டேன். அப்போது நண்பனுக்கும் இன்னொரு நபருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. எதிரில் இருந்த நபர் என்னுடைய நண்பரை தொடர்ந்து தவறான வார்த்தைகளால் குற்றம் சாட்டி வந்தார். நான் ஒவ்வொரு முறையும் குறுக்கிட்டு அப்படி பேசாதீர்கள் என்று தடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர் அப்படி பேசுவதை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அவரை ஓங்கி அறைந்து விட்டேன்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அந்த நபர் மூர்ச்சையாகி விட்டார். நாங்கள் எல்லோரும் அதிர்ந்து போனோம். அவ்வளவுதான் என்னுடைய சினிமா வாழ்க்கையை இனி முடிந்து போனது என்பது போல நிலைகுலைந்து போனேன். பின்னர் கொஞ்சம் தண்ணீரை அவரது முகத்தில் தெளித்தபோது கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு சுய நினைவு மீண்டும் திரும்பியதும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். இப்போதைய சூழல் என்றால் இந்த விஷயத்தை நான் மிகவும் எளிதாக கையாண்டிருப்பேன். அல்லது கடந்து சென்றிருப்பேன்” என்று கூறினார்.